உளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஜோதிடர் உள்பட இருவர் பலியானார்கள்.
சென்னை, பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் சாய் பாலாஜி(48). ஜோதிடர். இவரது நண்பர் சென்னை, தியாகராய நகரைச் சேர்ந்த சுந்தர்ராமன்(49). அக்குபஞ்சர் நிபுணர். இவர்கள் இருவரும் சொந்த வேலையாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை அதிகாலை காரில் புறப்பட்டனர்.
காரை, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல்(55) என்பவர் ஓட்டி வந்தார். வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் அடுத்த ஆசனூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
அப்போது, சாலையோரம் இடதுபக்கம் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜோதிடர் சாய் பாலாஜி, ஓட்டுநர் முருகவேல் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும், சுந்தர்ராமன் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த எடைக்கல் காவல்துறையினர் விரைந்து சென்று காயமடைந்த முருகவேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து எடைக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.