விழுப்புரத்தில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், இணையவழி வகுப்புகளை முறைப்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மத்திய மாவட்ட செயலாளர் க. பொன்முடி பங்கேற்று கண்டன உரையாற்றினர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீ வினோத் முன்னிலை வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன், திமுக மாவட்ட அவைத்தலைவர் நா.புகழேந்தி மற்றும் மாணவர் அணி, இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு காலத்தில் நடைபெற உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இணையவழி வகுப்புகளை அரசு முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.