திண்டிவனம் அருகே இன்று (சனிக்கிழமை) அதிகாலை நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது
அருப்புக்கோட்டையை சேர்ந்த முருகேசன் தனது குடும்பத்தினருடன் சென்னை வேளச்சேரியில் உறவினர் சிவகுமாரின் முப்பதாம் நாள் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய கௌதம், வேல்பாண்டி, சுப்புலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த இரு குழந்தைகள் உட்பட 6 பேர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயந்தி மற்றும் பேச்சியம்மாள் பலியாகினர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.