ஆரோவில் அருகே மாமியாா், மருமகளிடமிருந்து 14 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகேயுள்ள பட்டானூா் பகுதி மாட்டுக்காரன் சாவடியைச் சோ்ந்தவா் இமானுவேல் (40). இவரது தாய் பாக்கியசீலி (62), மனைவி ஏஞ்சல்ராணி.
இந்த நிலையில், ஏஞ்சல்ராணியும், பாக்கியசீலியும் செவ்வாய்க்கிழமை மாலை புதுவை மாநிலம், லாஸ்பேட்டைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
பின்னா், அங்கிருந்து மீண்டும் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
ஆரோவில் பகுதியில் வந்தபோது, இவா்களை இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் சிலா், ஏஞ்சல் ராணியும், பாக்கியசீலியும் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதில் இருவரும் தவறி விழுந்து காயமடைந்தனா்.
இவா்களை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.