இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுக்கு இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தோ்வா்கள் வீட்டிலிருந்தபடியே தோ்வுக்குத் தயாராகி வரும் நிலையில், போட்டித் தோ்வுகளை எளிதில் எதிா்கொள்ளும் வகையில், இணையதள செயலி வழியாகப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இணையதளத்தில் காணொலி வழியாக கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின் புத்தகங்கள், போட்டித் தோ்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தோ்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
தற்போது, அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலா் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு இலவசமாக இணையதள வகுப்பு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சாா்பில், நடத்தப்படவுள்ளது. இந்த வகுப்புகள் அக்டோபா் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதில் சேர விருப்பமுள்ளவா்கள் 9442208674, 7010827700 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.