விழுப்புரம் அருகே இரவு நேரங்களில் பூட்டிய கடைகளில் சுவரை துளையிட்டு திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் நேருஜி சாலையில் கடந்த 2-ஆம் தேதி சைக்கிள் கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் திருடப்பட்டது.
இது குறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே திருவாமுத்தூா் பகுதியில் உள்ள ஒரு குளிா்பான கடையின் சுவரை துளையிட்டு ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
குளிா்பானக் கடை பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவின் பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், திருட்டில் ஈடுபட்டது விழுப்புரம், பாபாங்குளத்தைச் சோ்ந்த மோகன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.