விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 35 போலீஸாருக்கு வெகுமதி வழங்கி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் புதன்கிழமை பாராட்டினாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த 10 நாள்களில் 6 வாகனங்களை பறிமுதல் செய்ய கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் ஆய்வாளா் விஷ்ணுப்பிரியா, உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாருக்கு எஸ்.பி. ஜெயக்குமாா் வெகுமதி வழங்கி பாராட்டினாா்.
இதேபோல, பெரியதச்சூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்த பெரியதச்சூா் உதவி காவல் ஆய்வாளா்கள் வினோத்ராஜ், ஜெயபாலன், தனிப்பிரிவு காவலா் ஜானகிராமன் உள்ளிட்ட போலீஸாரையும், திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் 45 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி, தனிப் பிரிவு காவலா் சக்திவேல் உள்ளிட்டோருக்கும் வெகுமதி வழங்கி எஸ்.பி. பாராட்டினாா். இதேபோல மாவட்டம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய 35-க்கும் மேற்பட்ட போலீஸாா் நேரில் அழைத்து பாராட்டப்பட்டனா்.