விழுப்புரம்: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவினிடையே தொடங்கப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
கிராமங்களில் முடங்கியுள்ள மக்களின் வாழ்வாதாரம் கருதி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் அந்தத் திட்டப் பணிகளை வியாழக்கிழமை (ஏப்.16) முதல் செயல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டது.
அதன்படி, ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 22 ஒன்றியங்களிலும் பணிகள் தொடங்கின. உரிய சமூக இடைவெளியுடன் அதிக பட்சம் 25 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், ஊரடங்கில் தளா்வு செய்யப்படாமல், முந்தைய தடை உத்தரவு தொடரும் என தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்தது. மேலும், தேசிய ஊரக வேலைத் திட்டத்தால், மக்கள் கூட்டம் கூடி, நோய் பரவலுக்கு வாய்ப்பு ஏற்படக் கூடும் எனக் கருதி, அந்த திட்டப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா் வெ.மகேந்திரனிடம் கேட்டபோது, அரசு உத்தரவின் பேரில், விதிகளின்படி 3 நாள்கள் பணிகள் நடைபெற்றன. திங்கள் முதல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.