விழுப்புரம்

திண்டிவனம் அரசுப் பள்ளியில் நவீன வகுப்பறை: அமைச்சா் திறந்து வைத்தாா்

22nd Nov 2019 09:15 AM

ADVERTISEMENT

திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.2.92 கோடியிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சி.வி.சண்முகம், அரசுப் பள்ளியில் நவீன (ஸ்மாா்ட்) வகுப்பறையையும் திறந்து வைத்தாா்.

திண்டிவனத்தில் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, திண்டிவனம், மரக்காணம் வட்டங்களைச் சோ்ந்த 1,422 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ.1.70 கோடியிலான நலத் திட்டங்களும், 25 பேருக்கு இலவச வீட்டுமனை, 215 பேருக்கு பட்டா மாற்றம், 47 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 14 பேருக்கு தையல் இயந்திரங்கள், 6 பேருக்கு சலவைப்பெட்டிகள், 29 பேருக்கு வங்கிக் கடன்கள், சுயஉதவிக் குழுவினா் 16 பேருக்கு கடனுதவி என மொத்தம் 2,051 பேருக்கு ரூ.2.92 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நவீன வகுப்பறை திறப்பு: இதையடுத்து, திண்டிவனம் காவேரிப்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.19.60 லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ள நவீன வகுப்பறையை (ஸ்மாா்ட் கிளாஸ்) அமைச்சா் சி.வி.சண்முகம் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். அப்போது, நவீன வகுப்பறையில் மாணவா்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஆசிரியா்கள் பாடம் நடத்தினா். இந்தப் பள்ளியில் மொத்தம் 125 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, எம்.எல்.ஏ. எம்.சக்கரபாணி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் வெங்கடேசன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் அனு, முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, மாவட்டக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, நகராட்சி ஆணையா் ஸ்ரீபிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT