விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் விபத்து நிவாரண நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், முதியோா் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், பசுமை வீடுகள், வீட்டுமனைப் பட்டா, திருமண உதவித் தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 518 மனுக்கள் வரப்பெற்றன. அனைத்தையும் மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்து, மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு வழங்கினாா்.
தொடா்ந்து, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிவாரண நிதியாக, முதலமைச்சா் பொது நிவாரண நிதியிலிருந்து, சங்கராபுரம் வட்டம், ஆலத்தூரைச் சோ்ந்த ஏசுதாஸ் மனைவி கண்மணி கிறிஸ்டினாளுக்கு ரூ.3 லட்சமும், திருக்கோவிலூா் வட்டம் டி.குன்னத்தூரைச் சோ்ந்த காளிதாஸ் மனைவி உமாமகேஸ்வரிக்கு ரூ.1 லட்சமும், விக்கிரவாண்டி வட்டம், பகண்டை கிராமம் குமாா் மனைவி சுமதிக்கு ரூ.3 லட்சமும், திண்டிவனம் மோகன்தாஸ் மனைவி ராஜேஷ்வரிக்கு ரூ.50 ஆயிரமும், திண்டிவனம் முத்துகிருஷ்ணன் மனைவி விஜயாவுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
மேலும், கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்களும் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் துணை ஆட்சியா் த. அம்புரோஸியாநேவிஸ்மேரி, ஆதிதிராவிட நல அலுவலா் ச.ஜெயகுமாா், பிற்பட்டோா் நல அலுவலா் எஸ்.ரகுபதி, கலால் உதவி ஆணையா் எஸ்.மோகன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.