வரலாற்றுச் சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை மலையில் அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் தேர்த் திருவிழா ஏற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியர் ஆதிபகவன் தலைமை வகித்தார்.
இதில், வருகிற 14ஆம் தேதி நடைபெறவுள்ள கமலக்கன்னி அம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
ரதம் உலா வரக் கூடிய தச்சம்பட்டு சாலையில், கால்வாய் செல்லும் இடத்தை, ரதம் சென்று வர உகந்ததாக நெடுஞ்சாலைத் துறை உடனடியாக செப்பனிட வேண்டும், ரதம் உலா வரும் வீதிகளில் பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்யவும், மின் கம்பிகளை சீர் செய்யவும் மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ரதம் வீதி உலா வரும் வழிகளில் குடிநீர், சுகாதார வசதியை செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும், காவல் துறையினர் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், சத்திரத் தெரு, திருவள்ளுவர் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும், கோயில் திரு விழா வருகிற 6-ஆம் தேதி தொடங்கி 14-ஆம்தேதி முடிவடையும் வரை அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விழாவில் கமலக்கன்னி அம்மன் கோயில் அறங்காவலர் அரங்க.ஏழுமலை, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர் எஸ்.வி.சுப்பிரமணியம், பாமக மாவட்ட துணைத் தலைவர் ஆர்.கணபதி, மற்றும் செஞ்சி காவல் ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.