கள்ளக்குறிச்சி அருகே சாலையோர கல் மீது கார் மோதி கவிழ்ந்ததில் இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கரூர் ராஜாஜி நகரைச் சேர்ந்த பாலாஜி மகன் சுஷாந்த் (29). பொறியியல் பட்டதாரியான இவர், துணி மொத்த வியாபாரம் செய்து வந்தாராம்.
இவர் தனது காரில் சென்னைக்கு சென்று விட்டு, கரூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். காரை கரூர் வைபாயுரி நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் சதீஷ்குமார் (35) ஓட்டி வந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஜெ ஜெ நகர் அருகே வந்தபோது, கார் திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த கல் மீது மோதி, அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், கார் பலத்த சேதமடைந்தது. காரில் இருந்த சுஷாந்த் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் சதீஷ்குமார் பலத்த காயமடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த சின்னசேலம் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.