டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநிலச் செயல் தலைவர் சரவணன், மாநிலப் பொருளாளர் ஜெய்கணேஷ், மாநிலச் செயலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ரமேஷ் வரவேற்றார். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒரு மாவட்டத்தின் மேலாளர், மற்றொரு மாவட்டத்துக்குச் சென்று ஆய்வு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பிட்ட கடைகளையே மீண்டும் ஆய்வு செய்வதையும், உடந்தையாக செயல்படாத சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளையும் நிறுத்த வேண்டும். டாஸ்மாக் கடை ஆய்வுகளுக்கு கடைப் பணியாளர்களை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் பன்னீர்செல்வம், தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலர் சுந்தர்ராஜன், தமிழ்நாடு கிராம ஊராட்சி களப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் வீரப்பன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் அசோகன், ரகோத், ராஜீ உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மாவட்டப் பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.