செஞ்சிக்கோட்டையின் முன் பக்கம் உள்ள அகழியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் செஞ்சி நகர பொது மக்களும் கோரிக்கை விடுத்தனர்.
செஞ்சி- திருவண்ணாமலை சாலையின் இடது புறம் ராஜகிரி கோட்டையும், வலது புறத்தில் கிருஷ்ணகிரி கோட்டையும் அமைந்துள்ளது.
கோட்டையின் முன் புறம் அகழி அமைந்துள்ளது. கடந்த சில நாள்களாக செஞ்சியில் மழை பெய்தும் அகழியில் தண்ணீர் தேங்கவில்லை.
திருவண்ணாமலை சாலையின் இருபுறமும் உள்ள இந்த அகழி தூர்ந்து போய் உள்ளது. முள் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன. இதற்கு தண்ணீர் செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள்ள சர்க்கரை குளத்தில் இருந்து தண்ணீர் வரவேண்டும். தற்போது, இங்கு வரும் தண்ணீரை சிலர் நிலத்துக்கு பயன்படுத்துவதற்காக இந்தக் குளத்தை சீர் குலைத்துள்ளனர். இதனால் அகழிக்கு தண்ணீர் வராமல் வேறு பாதையில் சென்று விடுகிறது.
மேலும், செஞ்சிக்கோட்டை அகழி தூர் வாரி பல ஆண்டுகள் ஆகின்றன. மண்டிக்கிடக்கும் மணல் மேடுகளையும் முள்புதர்களையும் அகற்றி அகழியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அகழியை அழகு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பணியை இந்திய தொல்லியல் துறையினர் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் நிலையாக நின்று செஞ்சி நகர மக்களுக்கு பயன் அளிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.