விழுப்புரத்தில் "108' அவசர ஊர்தி ஊழியர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், திங்கள் கிழமை பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கிய "108' அவசர ஊர்தி தொழிலாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: தமிழகத்தில் "108' அவசர ஊர்திகளை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனம், அவசர ஊர்தி சேவையை லாப நோக்கத்திலேயே செயல்படுத்தி வருகிறது. அவசர ஊர்தி ஊழியர்களுக்கு, அரசு வழங்கும் தொகையை வழங்காமல், சதவீத அடிப்படையில் பிரித்து, பொய்க் கணக்கு காண்பித்து, ஊழியர்களை ஏமாற்றி வருகின்றனர்.
இது தொடர்பாக, தொழிற்சங்கம் மூலம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அரசுத் தரப்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊதியத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஊதியம் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் 56 அவசர ஊர்திகளில் பணிபுரியும் 255 ஊழியர்களுக்கு தனியார் நிர்வாகத்தினர் வழங்கவில்லை. ஆகவே, எங்களது நியாயமான கோரிக்கைகளை பொது மக்களிடம் விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறோம் என்றனர்.