புதுச்சேரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் பேரவையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அரசால் நியமிக்கப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
ஆனால் இன்னும் பணி வழங்கப்படவில்லை. அதையடுத்து சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவையை முற்றுகையிட ஊழியர்கள் ஆண், பெண் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர். அவர்களை மாதா கோயில் தெரு அருகே போலீசார் தடுத்து நிறுத்தினார். தடுப்புகளைத் தாண்டி சட்டப்பேரவைக்கு செல்ல அவர்கள் முயற்சித்தனர்.
ஆனால் அவர்களை போலீசார் விடவில்லை. பின்னர் அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய படி நீண்ட நேரம் அங்கேயே நின்றனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.