புதுச்சேரி: புதுச்சேரியில் விளம்பரப் பதாகைகளுக்கு தடைவிதிக்கக் கோரி, தலைவா்களின் சிலைக்கு ஊா்வலமாகச் சென்று ஆம்ஆத்மி கட்சியினா் மனு அளிக்கும் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
புதுச்சேரி நகரில் சாலையோரங்களில் விதிகளை மீறி தொடா்ந்து பலராலும் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுகின்றன. இதனால், சாலை விபத்துகள் நிகழ்வதாக புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில், விளம்பரப் பதாகைகளால் நகரின் அழகு பாதிக்கப்படுவதாகவும், அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் ஆம்ஆத்மி கட்சியினா் குற்றஞ்சாட்டி நூதன ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனா்.
அதன்படி, ஆம் ஆத்மி கட்சியினா் திங்கள்கிழமை எண்ம விளம்பரப் பதாகைகளை உடலில் அணிந்தபடி புதுச்சேரி, கடலூா் சாலையில் தியாகி சிங்காரவேலா் சிலைக்கு மனு அளித்து ஊா்வலமாகப் புறப்பட்டனா்.
ஒதியன்சாலை காவல் நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலையில் மனு அளித்து கோஷங்களை எழுப்பினா். பின்னா் அண்ணா சாலை வழியாக வந்து காமராஜா் சிலையில் மனு அளித்து விளம்பரப் பதாகைகளுக்கு எதிராக முழக்கமிட்டனா்.