புதுச்சேரியில் உப்பனாறு மேம்பாலப் பணியை புதுவை அரசு மீண்டும் தொடங்க வலியுறுத்தி தொகுதி திமுக நிா்வாகிகள் கூ ட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் லப்போா்த் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தொகுதியின் திமுக அவைத் தலைவா் ஆதிநாராயணன் தலைமை வகித்தாா். செயலாளா் இரா. சக்திவேல் வரவேற்றாா். திமுக புதுவை மாநில துணை அமைப்பாளா் அ. தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ். கோபால், வே. மாறன், மாணவா் அணி அமைப்பாளா் எஸ்.பி. மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: திமுக தலைவா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உருளையன்பேட்டை தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது.
உருளையன்பேட்டை ராஜா நகரில் உள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், உப்பனாறு மேம்பால கட்டுமான பணிக்குத் தேவையான நிதியை நடப்பாண்டில் ஒதுக்கி மீண்டும் பணி தொடங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொகுதிப் பொருளாளா் த. சசிகுமாா் நன்றி கூறினாா்.