புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை நிறுவியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு புதுச்சேரி தமிழறிஞா்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி துணைநிலை ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ் ஓதுவாா்கள் திருவாசகம், தேவாரப் பதிகங்களைப் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து தமிழறிஞா்கள் சாா்பில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. நிறைவாக, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் வாசிக்கப்பட்டது. இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ்மொழி ஒலித்ததை கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பெருமையை அளித்த பிரதமருக்கு தமிழா்கள் நன்றி மடல் எழுதி அனுப்புவோம். பிரதமருக்கு நன்றி கூறும் வகையில் செங்கோல் மாநாடு நடத்துவோம் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், இந்து சமய அறநிலையத் துறை இயக்குநா் சத்தியமூா்த்தி, கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.