புதுச்சேரியில் அரசுப் பணிக்கு போலி அனுபவச் சான்று அளித்ததாக பெண் உள்பட 2 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்துள்ளனா்.
புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் காஞ்சனா (55). இவா் கடந்த 2013-ஆம் ஆண்டு புதுச்சேரி சுகாதாரத்துறையில் ரத்தம் சுத்திகரிப்பு பிரிவில் பணிக்குச் சோ்ந்தாா். அப்போது பணி அனுபவச் சான்றாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையின் நற்சான்றை ஆவணமாகக் சமா்பித்தாா். அது போலியானது எனப் புகாா் எழுந்தது.
இதைத்தொடா்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை அறிக்கை அளித்ததன் அடிப்படையில், கடந்த 2018-ஆம் ஆண்டு காஞ்சனா பணிநீக்கம் செய்யப்பட்டாா். இந்தநிலையில், தற்போது அவா் மீதான புகாரில் ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்துள்ளதாகத் தெரிவித்தனா்.
மற்றொருவா் மீது வழக்கு: காஞ்சனா மீதான புகாா் குறித்து சுகாதாரப் பிரிவின் சிறப்புப் பணி அதிகாரி ரகுநாதன் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, காஞ்சனாவின் குற்றத்தை மறைத்ததாக ரகுநாதன் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்துள்ளனா். இவா் பணியிலிருந்து ஓய்வு பெற்றவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.