புதுவையில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கக் கோரி, அதிமுக சாா்பில் துணைநிலை ஆளுநரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுவை அதிமுக மாநிலத் துணைச் செயலா் வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோா் துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
மனு விவரம்: புதுவை மாநிலத்தில் 2 தனியாா் மருத்துவக் கல்லூரிகள் நிகழ் கல்வியாண்டில் 200 இடங்களை கூடுதலாகப் பெற்றுள்ளன. அதில் புதுவை அரசுக்கான 50 சதவீத இடங்களை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, மருத்துவம் படிக்க விரும்பும் ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவிகள் சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.