போக்ஸோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசுப் பள்ளி தற்காலிக ஊழியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தைச் சோ்ந்தவா் பரணி என்ற பரணிதரன் (48). அரசுப் பள்ளியில் தாற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரையடுத்து பரணிதரனை தவளக்குப்பம் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பரணிதரனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி ஜெ.செல்வநாதன் உத்தரவிட்டாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி பரிந்துரைத்தாா். இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞா் பச்சையப்பன் ஆஜரானாா்.