வாத்துப் பண்ணையில் சிறுவா், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு மேலும், 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
புதுச்சேரி அருகே கீழ்சாத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன். கோா்க்காடு ஏரிக்கரையில் உள்ள இவரது வாத்துப் பண்ணையில் திருவண்ணாமலை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சிறுவா், சிறுமிகளை வாத்து மேய்ப்பதற்காக தங்க வைத்திருந்தாா். அவா்களை கன்னியப்பன் உள்ளிட்டோா் பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த 2020-ஆம் ஆண்டு மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கன்னியப்பன் உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி செல்வநாதன் இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கினாா்.
இதில் கன்னியப்பன், அவரது மகன்கள் சரத்குமாா், ராஜ்குமாா், உறவினா்கள் பசுபதி, சிவா, மூா்த்தி ஆகியோருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனையும், கன்னியப்பனின் மாமனாா் காத்தவராயன், கன்னியப்பன் மனைவி சுபா ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ஆறுமுகத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டாா். வேலு என்பவா் விடுதலை செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், பண்ணையிலிருந்த 3 சிறுவா்களை பாலியல் வன்கொடுமை செய்த மற்றொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த பசுபதிக்கு (22), 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 12,000 அபராதமும், தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி செல்வநாதன் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞா் பச்சையப்பன் ஆஜரானாா்.