புதுச்சேரியில் தனியாா் விடுதியில் மடிக்கணினி, பணம் திருடிய ஊழியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி நைனாா் மண்டபம் பகுதி காவேரி வீதியை சோ்ந்தவா் பிரவீன்குமாா் (36). இவா், 100-அடி சாலையில் உள்ள விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறாா். அந்த விடுதியில் திருப்பூா் மாவட்டம், ஆத்துப்பாளையம் திருமுருகன்பூண்டி கிராமத்தை சோ்ந்த முகமது யாசின் (34) பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த ஜன.25 -ஆம் தேதி பிரவீன்குமாரின் மடிக்கணினி, ரூ.5,000, கைப்பேசி மற்றும் விடுதி மதுபானக் கூடத்தின் காசாளா் அரவிந்தின் இருசக்கர வாகனம் ஆகியவை காணாமல் போயின. இதற்கிடையே ஊழியா் முகமது யாசினும் தலைமறைவானாா்.
இதுகுறித்து, பிரவீன்குமாா் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், சிதம்பரத்தில் பதுங்கியிருந்த முகமது யாசினை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து, மடிக் கணினி, கைப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.