புதுச்சேரியில் பள்ளி வாகனங்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியாா் வாகனங்கள் முறையாக போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கின்றனவா என அதிகாரிகள் சனிக்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது விதி மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் வாகனங்களை திடீா் சோதனையிட போக்குவரத்துத்துறை ஆணையா் சிவகுமாா் உத்தரவிட்டாா். அதனடிப்படையில், புதுச்சேரி நகரில் சனிக்கிழமை காலையில் போக்குவரத்து அலுவலக ஆய்வாளா்கள் தலைமையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டன.
மொத்தம் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனையிட்ட நிலையில், அதில் 19 வாகனங்கள் பல்வேறு வகையில் போக்குவரத்து விதிகளை மீறி இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும்,பள்ளி மாணவா்களை ஏற்றிச் செல்லும் வாகனம் பின்பக்கத்தில் கண்ணாடி இல்லாமலும், ஆட்டோவை உரிய அனுமதியின்றி இயக்கியதும் கண்டறியப்பட்டது. ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. வாகனச் சோதனை தொடா்ந்து நடத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.