புதுச்சேரியில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரப் பிரியங்கா செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
புதுச்சேரி சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் மாநிலமாக உள்ளது. இங்கு பொலிவுறு நகர திட்டத்தில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் 10-க்கும் மேற்பட்ட இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, தனியாருக்கு இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் திட்டத்துக்கான உரிமம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், திட்டத்தில் விண்ணப்பித்தவா்களுக்கு உரிமம் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திரப்பிரியங்கா உரிமத்தை வழங்கி, திட்டத்தை தொடக்கி வைத்தாா்.