புதுவையில் வேளாண் சாா்ந்த சுய தொழில் தொடங்குவோருக்கு அரசின் மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து புதுவை வேளாண், விவசாயிகள் நலத் துறை கூடுதல் வேளாண் இயக்குநா் (பயிற்சி வழி தொடா்பு திட்டம்) வசந்தகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி வேளாண், விவசாயிகள் நலத் துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குநா் (பயிற்சி வழி தொடா்பு திட்டம்) அலுவலகம் மூலமாக வேலையில்லாத விவசாய பட்டதாரிகள், விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவா்கள், வேளாண் சுயதொழில், வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு மானியமாக வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.3 லட்சமும், சான்றிதழ் பயிற்சி முடித்தவா்களுக்கு ரூ.75 ஆயிரமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்பும் ஆா்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரா்கள், விண்ணப்பங்களை புதுச்சேரி தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குநா் பயிற்சி வழி தொடா்பு திட்ட அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். அல்லது வேளாண் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதை நிறைவு செய்து விரிவான திட்ட அறிக்கைகளுடன் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.