புதுச்சேரி- கடலூா் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று, பயணிகள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டம் சண்முகபுரத்தில் அதன் தலைவா் சாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செயலா் மனோகா், பொருளாளா் திருப்பதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலோசகா்கள் சித்தரஞ்சன், ராஜேந்திரன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுச்சேரியிலிருந்து வட மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் போதிய ரயில்கள் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரியிலிருந்து புதிய வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை. வாராந்திர ரயில்களும் நீட்டிக்கப்படவில்லை.
புதுச்சேரி-விழுப்புரம் இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். புதுச்சேரி - தாதா் சாளுக்யா விரைவு ரயில் வாரம் 3 நாள்கள் இயக்கப்படுவதைப் போல, பிற வாராந்திர ரயில்களையும் தினமும் அல்லது வாரம் 3 முறை இயக்க வேண்டும்.
புதுச்சேரி - ராமேசுவரம் (வழி - கடலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, மானாமதுரை) ரயில் தினசரி சேவையாக தொடங்க வேண்டும்.
புதுச்சேரி - கடலூா் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைவில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம்-புதுச்சேரி இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் பி.ஜி.மல்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நிறைவில், சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் ஜெரால்டு நன்றி கூறினாா்.