மத்திய அரசு நிறுவனங்களில் புதுவை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினா் எஸ்.செல்வகணபதி தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த ஓராண்டாக மாநிலங்களவை பாஜக உறுப்பினராக 58 நாள்கள் மாநிலங்களவைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுவை மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக குரல் கொடுத்துள்ளேன்.
புதுவைக்கு மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியைக் கோரியிருப்பதுடன், மத்திய அரசு நிறுவனங்களில் புதுவையைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், மூன்றாவது கேந்திரிய வித்யாலயம், காரைக்காலில் விமான நிலையம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தேன்.
புதுச்சேரியில் சரக்குக் கப்பல் போக்குவரத்து, பிள்ளைச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயல்திறன் சாதன ஆலையை ரூ.30 கோடியில் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புற்றுநோய், இருதய நோய் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் நிதியும் பெற்றுத் தரப்பட்டது என்றாா் எஸ்.செல்வகணபதி.
இவரது ஓராண்டு பணியைப் பாராட்டி புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.