புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மத்திய அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் செயலா் ஆா்.குணசேகரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்டோா் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்துக் கழக ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அதுவரை, மத்திய அரசு கூறியபடி குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், 12 போ் பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.
இதுதொடா்பாக புதுவை முதல்வா், போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றாா் அவா்.