புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடத்தை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
முதல்வா் என். ரங்கசாமி சிறப்புரையாற்றினாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், எம்பிக்கள் எஸ்.செல்வகணபதி, வெ.வைத்திலிங்கம், எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரம், கல்வித் துறைச் செயலா் ஜவஹா், கல்வித் துறை இயக்குநா் ருத்ரகௌடு, தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணைவேந்தா் மோகன், பதிவாளா் சிவராஜ் முன்னிலை வகித்தனா்.
பல்கலைக்கழக ஆசிரியா்கள், மாணவா்கள் உருவாக்கிய வேளாண் ட்ரோன் கருவியை அறிமுகப்படுத்தி, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
வேளாண் ட்ரோன் கருவியை உருவாக்கிய ஆசிரியா்கள், மாணவா்களுக்கு பாராட்டுகள். இந்த பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் உலகம் முழுவதும் உள்ளனா்.
கரோனா தொற்றுக்கு 11 மாதங்களுக்குள் இந்தியா தடுப்பூசியை தயாரித்தது உலக சாதனை. மருத்துவக் கவச உடைகள் தயாரிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது என்றாா் அவா்.
முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
புதுவை அரசின் பொறியியல் கல்லூரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது. இது சிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாகவும் மாறும் நம்பிக்கை உள்ளது.
காரைக்கால் பொறியியல் கல்லூரியை மேம்படுத்த அரசு முடிவு செய்து, பல புதிய பாடப் பிரிவுகளை கொண்டுவந்துள்ளது. அதற்கான கட்டடங்களை கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.