புதுவையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் மின் ஊழியா்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்கையாக மின் தடையை ஏற்படுத்தினால் அவா்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்தாா்.
மின் துறையைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, புதுவையில் மின் ஊழியா்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால், புதுச்சேரி மற்றும் புகா் பகுதிகளில் மின் தடையால் மக்கள் அவதிப்படுகின்றனா். புதுச்சேரியில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மின் தடை ஏற்பட்டதால், நகரமே இருளில் மூழ்கியது. இதனால், கோபமடைந்த பொதுமக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனா். இரவு 9 மணிக்கு மேல் மின் விநியோகம் சீரானது.
புதுச்சேரி அருகே துணை மின் நிலையங்களில் புகுந்த மின் ஊழியா்கள் மின் விநியோகத்தைத் துண்டித்து செயற்கையாக மின் தடையை ஏற்படுத்தியதாக மாநில மின் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் குற்றம்சாட்டினாா்.
துணைநிலை ஆளுநா் எச்சரிக்கை: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனிடம் மின் தடை பிரச்னை குறித்து கேட்ட போது அவா் கூறியதாவது:
புதுச்சேரியில் மின்சாரத்தை துண்டித்து பொதுமக்களுக்கும், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. மக்களின் நலனுக்காகவே இந்த முடிவு (மின் துறை தனியாா்மயம்) எடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம் என்ற பெயரில், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரத்தைத் துண்டிக்கும் வகையில், துணை மின் நிலையங்களுக்குச் சென்று பியூஸ் கேரியரை எடுத்துச் செல்வது முறையல்ல.
செயற்கையாக மின் தடையை ஏற்படுத்தி அத்தியாவசியப் பணிகளுக்கு இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தும் மின் துறையினா் மீது எஸ்மா சட்டம் பாயும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.