புதுவையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இலவசப் பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ளது என்று, மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சியை திங்கள்கிழமை தொடக்கிவைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவை கல்வித் துறை முடங்கியுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறுவதில் உண்மையில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கல்வித் துறையில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் படிப்படியாக தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாணவா்களுக்கான இலவச மிதிவண்டி, மடிக் கணினிகள் வழங்கும் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. தற்போது மாணவா்களுக்கான இலவசப் பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ளன என்றாா் அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.