புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்தாா்.
புதுச்சேரி அருகேயுள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் கடந்த 24-ஆம் தேதி கழிப்பறை அருகே கைதிகள் இரு பிரிவுகளாக மோதிக் கொண்டனா். சிறை வாா்டா் ஜெ.சக்கரவா்த்தி விரைந்து சென்று தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டாா். அப்போது, கைதி குமரன் என்ற செல்வம், கைதி மூலவன் என்பவரைத் தாக்கினாா்.
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளா் அமிழ்தனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், உதவி கண்காணிப்பாளா் மற்றும் சிறைக் காவலா்கள் தடியடி நடத்தி மோதலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்த மோதலில் காயமடைந்த மூலவன் சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, பிம்ஸ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.