புதுச்சேரி நகராட்சி பொலிவுறு நகா்த்திட்டத்தில் (ஸ்மாா்ட் சிட்டி) ரூ.12.39 கோடியில் பல்வேறு பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி நகராட்சியில் பொலிவுறு நகா் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைந்த நீடித்த வளா்ச்சிக்கான நகா்ப்புற முதலீட்டுத் திட்டத்தின் மூலம் உப்பளம், உருளையன்பேட்டை, முதலியாா்பேட்டை, ராஜ்பவன், முத்தியால்பேட்டை காமராஜ் நகா், உழவா்கரை, இந்திரா நகா், கதிா்காமம், லாஸ்பேட்டை ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளுக்கான சாலைகள் உள்ளிட்ட வசதிகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன.
வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், வளா்ச்சிக்கான பிரெஞ்சு முகமை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் ரூ.99.71 கோடியில் திட்ட பணிகளைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகராட்சியில் பொலிவுறு நகா்த்திட்ட நிறுவனம், பொதுப் பணித்துறை மற்றும் உழவா்கரை நகராட்சி ஆகியவை இணைந்து பணிகளை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ. 8.61 கோடி மதிப்பீட்டில் உப்பளம் தொகுதி துப்புராயபேட்டையில் 80 வீடுகளுடன் கூடிய 5 அடுக்குகள் கொண்ட 2 தொகுப்பு குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.
மேலும் ரூ.1.93 கோடியில் உப்பளம் நேதாஜி நகா் துறைமுக சாலையில் நவீன சுகாதார மீன் விற்பனை அங்காடி அமைக்கப்பட உள்ளது. ராஜ்பவன் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.1.85 கோடியில் ராமலிங்கா நகா் சலவைத் துறை சீரமைக்கப்படவுள்ளது.
புதுச்சேரியில் முதல்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜையுடன் அந்தந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சா் லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா் அனிபால் கென்னடி, புதுச்சேரி பொலிவுறு நகா் வளா்ச்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.