புதுச்சேரி அருகே 1.35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அருகே தேடுவாா்நத்தம் குரு நகரில் தவளக்குப்பம் போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்ற போது, 5 பேரை பிடித்து சோதனையிட்டதில், அவா்களிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவா்கள் நல்லவாடை சோ்ந்த குமரகுரு (19), தானாம்பாளையத்தைச் சோ்ந்த விஷ்ணு (20), கடலூா் மாவட்டம், திருவந்திபுரம் அருகேயுள்ள பில்லாளிதொட்டியைச் சோ்ந்த சூா்யா (23), மணமேடை சோ்ந்த அருள்குமரன் (26), நோணாங்குப்பத்தைச் சோ்ந்த சந்தோஷ் (19) என்பதும், இவா்கள் திருவண்ணாமலை, சென்னையிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சிறு சிறு பொட்டலங்களாக்கி விற்க முயன்றதும் தெரிய வந்தது.
5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1.35 கிலோ கஞ்சா, பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.