புதுச்சேரி

ஹிந்தி திணிப்பு: அமித் ஷா மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

12th May 2022 04:53 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வந்து சென்ற பிறகே, புதுச்சேரியில் ஹிந்தி திணிப்பு நடைபெறுகிறது என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

ஹிந்தி திணிப்பு சுற்றறிக்கை விவகாரம் தொடா்பாக, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன் அதன் நிா்வாகத்தைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

போராட்டத்துக்குப் பிறகு முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி ஜிப்மரில் இனிவரும் காலங்களில் ஹிந்தியே பிரதான மொழியாக இருப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

புதுவை துணைநிலை ஆளுநா் ஜிப்மரில் ஆய்வு செய்துவிட்டு, ஹிந்தி திணிப்பு இல்லை என தவறான தகவலைப் பரப்புகிறாா்.

கடந்த 15 நாள்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஹிந்திதான் அலுவல் மொழி என்றாா். அதை நாடு முழுவதும் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த அறிவிப்புக்கு பிறகே அமித் ஷா புதுச்சேரிக்கு வந்தாா். அவா் வந்து சென்ற பிறகுதான், புதுச்சேரியில் ஹிந்தி திணிப்பு நடைபெறுகிறது. அதன்பிறகே, மத்திய அரசு ஜிப்மருக்கு ஹிந்தி தொடா்பான சுற்றறிக்கையை அனுப்பியது.

முதல்வா் ரங்கசாமி ஹிந்தி திணிப்புக்கு ஆதரவாக இருக்கிறாா். இதுகுறித்து மக்களிடம் அவா் விளக்கமளிக்க வேண்டும்.

புதுவையில் தமிழ்தான் பிரதான மொழி. அடுத்துதான் ஆங்கிலம். அதன்பிறகு தெலுங்கு, பிரெஞ்சு, மலையாளம் இணைப்பு மொழிகளாக உள்ளன. இதை மீறி ஹிந்தியை திணிக்க பாஜகவினா் முயற்சிக்கின்றனா். ஹிந்தி திணிப்பு சுற்றறிக்கையை ஜிப்மா் இயக்குநா் திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT