புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி லாசுப்பேட்டை விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை நிறுத்தப்பட்டது. தொற்று குறைந்து சகஜ நிலை திரும்பிய போதும், மீண்டும் விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், ஹைதராபாத் - புதுச்சேரி இடையே ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தால் விமான சேவை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணிகளுடன் புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனும் பயணம் செய்தாா்.
ஹைதராபாதில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்பட்ட விமானம் 1.30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தது. லாசுப்பேட்டை விமான நிலையத்தில் தரை இறங்கியபோது, விமானத்துக்கு இரு புறமும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
விமானத்தில் வந்த துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பயணிகளுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பூங்கொத்து, இனிப்புகளை வழங்கி வரவேற்றாா்.
இந்த நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துணைத் தலைவா் ராஜவேலு, அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், ராமலிங்கம் எம்எல்ஏ, தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், சுற்றுலாத் துறை செயலா் டி.அருண் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னா், அந்த விமானம் பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கிருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தது. தொடா்ந்து, அந்த விமானம் மாலை 4.30 மணிக்கு ஹைதராபாதுக்கு புறப்பட்டுச் சென்றது.