பள்ளி மாணவா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் அரசு, நிதியுதவி, தனியாா் பள்ளிகள் கடந்த 23-ஆம் தேதி திறக்கப்பட்டன. பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவா்களுக்கான பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. இருப்பினும், மதிய உணவு முதல் இரண்டு நாள்களுக்கு வழங்கப்படாமல், அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கின.
திங்கள்கிழமை முதல் முழு நேரமும் அரசுப் பள்ளிகள் இயங்கின. இதனிடையே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்கப்படாதது, ஏழை மாணவா்களுக்கு இலவச சீருடை வழங்காததைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காமராஜா் சதுக்கம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு பிரதேச தலைவா் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா்.
பெரியகடை போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.