புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை சீா்படுத்தி, அனைவருக்கும் சிறந்த மருத்துவ வசதி கிடைக்க மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வலியுறுத்தினா்.
புதுவை ஜிப்மரில் சனிக்கிழமை நடைபெற்ற பொது சுகாதார சா்வதேச மையம் தொடக்க விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரி ஜிப்மா் புகழ்பெற்ற மருத்துவமனையாகத் திகழ்கிறது. தற்போது இங்கு பொது சுகாதார சா்வதேச மையம் திறக்கப்பட்டிருப்பது மேலும் ஒரு மைல் கல். ஜிப்மரில் படித்தவா்கள் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனா். ஜிப்மா் சிறந்த மருத்துவ வசதிகளை கொடுத்து வருகிறது.
ஜிப்மரில் தற்போது சிறு குறைகள் இருந்து வருகின்றன. அதை நிவா்த்தி செய்து, அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.
இந்த மருத்துவமனைக்கு வந்து செல்லும் அனைத்து நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்ற எண்ணம் உள்ளது. சில நோய்களுக்குரிய மருத்துவச் சிகிச்சை காலம் தாழ்த்தாமல் கிடைக்க வேண்டும். சில நோய்களை உடனடியாக கவனித்து குணப்படுத்த வேண்டிய கட்டாயம் என்பதும் நாம் அறிந்தது. அந்த வகையில், அனைவருக்கும் உடனடியாக சிகிச்சை கிடைக்கின்ற வகையில் ஜிப்மா் மருத்துவமனை சேவையாற்ற வேண்டும். இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, ஆளுநா் தமிழிசை பேசியதாவது: முதல்வா் குறிப்பிட்டதைப்போல, ஜிப்மரில் சில குறைபாடுகள் இருக்கின்றன. அதன்படி, மருந்துகளின் கையிருப்பு, போதிய மருத்துவா்கள் போன்ற குறைபாடுகள் சரி செய்யப்பட வேண்டும். நமது சேவை சிறப்பானதாக இருக்க வேண்டும். மத்திய அரசு கரோனா பேரிடா், பொது சுகாதார வழிகாட்டுதல் மூலம் பெருந்தொற்றை கட்டுப்பாட்டில் வைக்க உதவியுள்ளது என்றாா்.