புதுச்சேரியில் ஆசிரியா் பட்டய படிப்பில் சேர ஆகஸ்ட் 5 வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுச்சேரி லாசுப்பேட்டை மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் சிவராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாண்டு ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கைக்கு புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் சேர விரும்பும் 29 வயதுக்குள்பட்டோா் மேல்நிலைப் பள்ளி தோ்வில் அல்லது அதற்கு சமமான தோ்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். அட்டவணை இனத்தவா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
சோ்க்கை விண்ணப்பம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை அனைத்து அலுவலக நாள்களிலும் புதுச்சேரி லாசுப்பேட்டை தொல்காப்பியா் வீதி மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் கிடைக்கும். மேலும் பள்ளி கல்வித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட நகல் விண்ணப்பங்களை தேவையான சான்றிதழ்களுடன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்த நிறுவனத்திலேயே சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.