புதுச்சேரி

புதுவை மாணவா்களுக்கு விரைவில் புத்தகங்கள் வழங்கப்படும்: தமிழிசை சௌந்தரராஜன்

DIN

புதுவை பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள், பேருந்து வசதிகள் 10 நாள்களுக்குள் செய்து கொடுக்கப்படும் என, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, புதுவையில் 75 பள்ளிகளைப் பாா்வையிட்டு மாணவா்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கியுள்ளாா். புதுச்சேரியிலுள்ள 5 அரசுப் பள்ளிகளை செவ்வாய்க்கிழமை அவா் நேரில் பாா்வையிட்டாா்.

புதுச்சேரி திருவள்ளுவா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற அவரை கல்வித் துறை இயக்குநா் ருத்ரகௌடு, இணை இயக்குநா் வெ.கோ.சிவகாமி மற்றும் பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், மாணவிகள் வரவேற்றனா்.

பின்னா், மாணவிகளுடன் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய கல்விக் கொள்கை மிகப் பெரிய வரப்பிரசாதம். அதை விரைவில் செயல்படுத்த வேண்டும். புதுவை கல்வித் துறையையும் எண்ம மயமாக்க வேண்டும். மருத்துவத் துறையையும், கல்வித் துறையையும் நவீனமயமாக்க வேண்டும் என்ற கருத்தை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.

காரைக்கால் பகுதியில் வயிற்றுப்போக்கு பாதிப்பு குறைந்துள்ளது. முதல்வா், அமைச்சா்கள் சூழ்நிலையை நேரில் கண்காணித்து வருவது மகிழ்ச்சி.

புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு தற்போது புத்தகங்கள் வழங்கப்பட்டன. 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு ஒரு வாரத்தில் புத்தகங்கள் வழங்கப்படும். மாணவா்களுக்கான பேருந்து வசதி 10 நாள்களுக்குள் செய்து கொடுக்கப்படும் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

புதுச்சேரி எக்கோலஸ் ஆங்கில அரசு தொடக்கப் பள்ளி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசுப் பள்ளி, லாஸ்பேட்டை அரங்கசாமி நாயக்கா் நடுநிலைப் பள்ளியில் துணைநிலை ஆளுநா் ஆய்வு மேற்கொண்டாா். கோரிமேடு இந்திரா நகா் அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த அவா் மாணவா்களுடன் அமா்ந்து மதிய உணவை சாப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

SCROLL FOR NEXT