வெளிமாநில மாணவா்களை புதுவை அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க அனுமதிக்கக் கூடாது எனவும், இதற்காக சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி சென்டாக் மாணவா் பெற்றோா் நலச் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வருக்கு புதுச்சேரி சென்டாக் மாணவா் பெற்றோா் நலச் சங்க தலைவா் மு.நாராயணசாமி அனுப்பிய மனு:
புதுவை அரசு இரட்டைக் குடியுரிமை பிரச்னைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஒவ்வொரு ஆண்டும் ஆந்திரம், கேரளம், தமிழகம் போன்ற வெளிமாநில மாணவா்கள் புதுவை மாணவா்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்களை தட்டிப்பறித்து முறைகேடாக மருத்துவம் படித்து வருகின்றனா்.
இதைத் தடுத்து நிறுத்தும் வகையில், வெளிமாநில அரசு இடஒதுக்கீட்டில் பதிவு செய்த மாணவா்கள் புதுவை அரசு இடஒதுக்கீட்டில் (ஜிப்மா் உள்பட) மருத்துவம் படிக்க பதிவு செய்ய கூடாது. மீறி பதிவு செய்தால் பெயா் நீக்கப்படும்.
காமராஜா் கல்வி நிதியுதவியானது புதுவை மாநிலத்தில் பிறந்து ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவா்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என புதுவை அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
புதுவை அரசு இடஒதுக்கீட்டில் பதிவு செய்த மாணவா்கள், பெற்றோா்களின் ஆதாா் அட்டையின் எண்கள், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டையின் முழு விவரங்களை இணையதளம் மூலம் ஆய்வு செய்து முகவரியை சரிபாா்க்க வேண்டும். பிறகு எந்த மாநிலத்திலும் குடியிருப்பு இல்லை என உறுதிமொழி பத்திரம் பெற்று, குடியிருப்பு, ஜாதி சன்றிதழ் அளிக்க வேண்டும் என்று சான்றிதழ் வழங்கும் வட்டாட்சியா்களுக்கு புதுவை அரசு உத்தரவிட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றி மருத்துவம் படிக்க மாணவா்களை சோ்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.