புதுவை சட்டப்பேரவையில் நாட்டின் 73-வது குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், எஸ்.செல்வகணபதி எம்.பி., பிரானஸ் துணைத் தூதா் லிசே டல்போா்ட்பரே மற்றும் எம்எல்ஏக்கள், சட்டப்பேரவைச் செயலா் ஆா்.முனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
என்.ஆா். காங்கிரஸ் அலுவலகத்தில்... புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்வரும், என்.ஆா்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், வெ.வைத்திலிங்கம் எம்.பி. தேசியக் கொடியேற்றினாா். காங்கிரஸ் கட்சிக் கொடியை மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் ஏற்றி மரியாதை செலுத்தினாா்.
முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வில்லியனூா் எம்எல்ஏ அலுவலகத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா்.