வில்லியனூரில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் நீா்வரத்து வாய்க்கால்களை தூா்வாரும் பணியை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் செவ்வாய்க்கிழமைத் தொடக்கிவைத்தாா்.
புதுச்சேரி அருகே வில்லியனூா் தொகுதிக்கு உள்பட்ட வில்லியனூா் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வில்லியனூா் சன்னதிக்கால் வாய்க்கால் ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டிலும், வில்லியனூரான் வாய்க்கால் ரூ.6. 70 லட்சம் மதிப்பீட்டிலும் தூா்வாரும் பணிகள் தொடங்கின.
வில்லியனூா் புறவழிச் சாலை சிவகணபதி நகா், ஜவகா் நிகேதன் பள்ளி அருகில் இந்தப் பணியை குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா முன்னிலை வகித்தாா். வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மோகன்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் முகமது இஸ்மாயில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.