தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி, ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி எல்லைகளில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இதையொட்டி, புதுச்சேரியில் தமிழகப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. புதுச்சேரியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் வெறிச்சோடிக் காணப்பட்டது.
எனினும், புதுவையில் ஊரடங்கு இல்லாததால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குள்ளும், தமிழக எல்லை வரையிலும் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி, கோரிமேடு, கோட்டக்குப்பம், கனகசெட்டிகுளம், முள்ளோடை, திருக்கனூா், மதகடிப்பட்டு உள்ளிட்ட புதுவை மாநில எல்லைகளில் தமிழக போலீஸாா் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பு, வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுவையில் வெளிமாநிலத்தவா், சுற்றுலாப் பயணிகள் இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காட்டிய பின்னா், தடையின்றி அனுமதிக்கப்பட்டனா். எனினும், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.
புதுவை மாநில எல்லையும், தமிழகப் பகுதி எல்லையும் ஒரே சாலையில் உள்ள கோட்டக்குப்பத்தில் ஊரடங்கையொட்டி, வாகனப் போக்குவரத்தைத் தடுக்க தமிழக போலீஸாா் தடுப்புகளை அமைத்திருந்தனா். அதே சாலையின் மறுபக்கம் புதுச்சேரி எல்லை என்பதால், கடைகள் திறக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் இயல்பாக இருந்தது.