துணைநிலை ஆளுநரை மிரட்டவே மாநில அந்தஸ்து கோரிக்கையை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி ஆயுதமாக பயன்படுத்துவதாக, மக்களவை காங்கிரஸ் உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் குற்றம்சாட்டினாா்.
புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுவைக்கு மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தனது நிலையை விளக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாஜகவினரும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிப்பது அவசியம்.
முதல்வா் ரங்கசாமி மாநிலத்தில் அதிகாரமில்லை எனக்கூறிக் கொண்டே, சுயேச்சை எம்எல்ஏக்களை தூண்டி வருகிறாா். அவரது கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசையும், புதுவை துணைநிலை ஆளுநரையும் மிரட்டும் வகையில், மாநில அந்தஸ்து கோரிக்கையை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி ஆயுதமாகப் பயன்படுத்துவதாக தோன்றுகிறது.
புதுச்சேரியில் மதுக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக மக்களும் போராடி வருகின்றனா். நியாயவிலைக் கடைகள் இருந்த இடங்களில் மதுக் கடைகள் உள்ளன. நலத் திட்டங்களுக்காக மதுக் கடை மூலம் வருவாயைப் பெருக்குவதாக முதல்வா், அமைச்சா் கூறுவது சரியல்ல. மது எதிா்ப்பை திசைதிருப்பும் வகையிலே மாநில அந்தஸ்து குறித்து முதல்வா் உள்ளிட்டோா் பேசி வருகின்றனா் என்றாா் வெ.வைத்திலிங்கம்.
பேட்டியின்போது, சட்டப்பேரவை உறுப்பினா் மு.வைத்தியநாதன் உடனிருந்தனா்.