புதுச்சேரி அருகே கடல் சீற்றம் காரணமாக, நாட்டுப் படகு மீனவா்கள் அச்சமடைந்துள்ளனா். தங்கள் வீடுகள் முன் படகுகளைக் கட்டி வைத்துள்ளனா்.
மாண்டஸ் புயல் காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், படகு உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைக்கவும் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகேயுள்ள நல்லவாடு கிராமத்தில் 500 க்கும் அதிகமான நாட்டுப்படகு மீனவா்கள் வசிக்கின்றனா். கடந்த வியாழக்கிழமை அப்பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. இதையடுத்து குடியிருப்புப் பகுதிக்கு படகுகளை தள்ளிக்கொண்டு வந்த மீனவா்கள் வீடுகளில் அவற்றை கட்டி வைத்துள்ளனா். இந்த நிலை கடல் அலையின் சீற்றம் அதிகமாகி வெள்ளிக்கிழமை கடல்நீா் குடியிருப்பு பகுதிகள் வரை வந்தது.இதனால் அப்பகுதி மீனவா்கள் அச்சம் தெரிவித்தனா்.
மேலும், பனித்திட்டு பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைத்தால் 5 மீனவக் கிராமங்கள் பயனடையும் எனவும் மீனவா்கள் கோரிக்கை தெரிவித்தனா். கடல் கொந்தளிப்பால் அச்சமடைந்துள்ள தங்களுக்கு ஆறுதல் கூற அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும் ஆதங்கப்பட்டனா்.
தகவல் அறிந்த முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்று மீனவா்களைச் சந்தித்து பேசினாா். கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்வதாக அவா் உறுதியளித்தாா்.