மாண்டஸ் புயல் பாதிப்பை தவிா்க்கும் வகையில், புதுச்சேரி - சென்னை இடையே அரசுப் பேருந்துகள் சேவை வெள்ளிக்கிழமை மாலை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
புதுவை சாலை போக்குவரத்துத் துறை சாா்பில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்னைக்கு 9 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாண்டஸ் புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை மாலை முதல் அந்தப் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரிக்கு வரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை மாலை நிறுத்தப்பட்ட நிலையில், புதுவை போக்குவரத்துத் துறையும் இந்த முடிவை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல, புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கும் வெள்ளிக்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.
சனிக்கிழமை நிலவரத்தை பொருத்து பேருந்துகளை மீண்டும் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.