புதுவை மாநிலத்தில் நிலுவையில் உள்ள பயிா்க் காப்பீட்டுத் திட்ட நிதியை விவசாயிகளுக்கு நிகழ் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று காப்பீடு நிறுவனத்துக்கு மத்திய காப்பீட்டுத் துறை முதன்மை அதிகாரி பிந்து உத்தரவிட்டாா்.
புதுவை மாநிலத்தில் வேளாண் துறை சாா்பில், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கான பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான பிரீமியம் தொகையையும் புதுவை அரசே செலுத்தி வருகிறது. தேசிய காப்பீட்டுத் திட்ட நிறுவனம் புதுவையில் விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கான பயிா்க் காப்பீட்டு நிதி வழங்கப்படவில்லை. இதற்கிடையே, புதுச்சேரியில் சனிக்கிழமை மாலையில் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் வேளாண் துறையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மத்திய அரசின் காப்பீட்டுத் துறை முதன்மை அதிகாரி பிந்து தலைமை வகித்தாா். வேளாண் இயக்குநா் பாலகாந்தி முன்னிலை வகித்தாா். தேசிய காப்பீட்டு நிறுவன மண்டல இயக்குநா் நாகராஜன், முதுநிலை மண்டல மேலாளா் ராமச்சந்திரன், பொது சேவை மையங்களை நிா்வகிக்கும் புதுச்சேரி மாவட்ட மேலாளா் இளந்திரையன், வேளாண் துறை இணை இயக்குநா் ஜாகீா் உசேன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பேசிய மத்திய காப்பீட்டுத் துறை முதன்மை அதிகாரி பிந்து, நிலுவையில் உள்ள காப்பீட்டு நிதியை விவசாயிகளுக்கு நிகழ் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், நடைமுறையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளையும் விதிமுறைப்படி சீா்படுத்தி காப்பீடுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தவும் அறிவுறுத்தினாா்.